பரந்தூரில் விமான நிலையம்: சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு அனுமதி - மத்திய அரசின் விதிகள் என்னென்ன?

By KU BUREAU

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் விமான நிலையம் அமைக்க பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746.18 ஏக்கர் நிலத்தைகையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அரசாணையில், தனியார் பட்டா நிலம் 3,774.01 ஏக்கரும் அரசு நிலம் 1,972.17 ஏக்கரும் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார்நிலத்துக்கு அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி, ரூ.1,822.45 கோடி இழப்பீடும் நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது பரந்தூர் விமான நிலையத்துக்கான நில எடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதன்படி சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும்மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஆய்வு அம்சங்கள்: ஆய்வு எல்லைகளில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையுடன், விமான நிலையம் அமையும் இடத்தில் தொல்லியல் சார்ந்த பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்த வேண்டும். இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். பாதிக்கப்படும் குடும்பங்களை இடம் மாற்றுவது தொடர்பான சமூக தாக்க ஆய்வுமற்றும் துயர் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகள் நடத்த வேண்டும்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீரியல் சார்ந்த ஆய்வு செய்யப்பட வேண்டும். மரம் வெட்டுதல், நடுதல், பசுமையாக்குதல் போன்றவை தொடர்பாக மாநில வனத்துறையின் ஆலோசனையுடன் விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும். சதுப்பு நிலம் தொடர்பாக ஆய்வு நடத்தி, மாநில அரசின் சதுப்பு நிலம் தொடர்பான ஆணையம் அல்லது இதர துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

சுற்றுச்சூழல் தாக்க பகுப்பாய்வு நடத்த வேண்டும். பறவைகள் வலசைப் பாதையில் ஏற்படும் பாதிப்பு, நீர்நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மின்உற்பத்திக்காக இயற்கை எரிவாயு பயன்படுத்துவது தொடர்பாகவும், திட்டத்தால் ஏற்படும் முக்கியமான நன்மைகள் குறித்தும் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.

விமான நிலைய உட்கட்டமைப்பு வரைபடம் இணைக்க வேண்டும். அகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அகழ்ந்து எடுக்கப்படும் பொருட்களை வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கான மேலாண்மை திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

விரிவான போக்குவரத்து மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டு, மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெற்று இணைக்கப்பட வேண்டும்.

மதிப்பீடு இணைக்க வேண்டும்: அபாயங்கள் மற்றும் விபத்துகள் தொடர்பான பேரிடர் மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். குளிர்சாதன அமைப்புகள், உள்புற விளக்கு அமைப்புகள், தண்ணீர் மற்றும்காற்று வெப்பமாக்கும் கருவிகள் உள்ளிட்டவை கார்பன் குறைப்பை ஊக்குவிப்பவையாக இருக்க வேண்டும்.

தேவைப்படும் தண்ணீர், மின்சாரம், பணியாளர்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். திட்ட முடிவின்போது திட்ட மதிப்பீடு உள்ளிட்டவையும் இதில் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE