மகாவிஷ்ணு விவகாரத்தில் அரசு விரைவு நடவடிக்கை: கரூர் எம்.பி ஜோதிமணி பாராட்டு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளது என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கூறியுள்ளார்.

கரூரில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களுக்கு இன்று (செப். 9ம் தேதி) அளித்த பேட்டியில் கூறியது: "ஜனநாயக நாட்டில் இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாக பதிவு செய்து நடத்தும் உரிமை உள்ளது. புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துகள். புதிதாக கட்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளனர் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. கட்சியின் கொள்கையை அறிவித்து மக்களை சந்திக்கும்போது தான் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பது தெரியும்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மக்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் நடந்த முடிந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி கிடைத்தது.

வரக்கூடிய சட்டப் பேரவைத் தேர்தலிலும் அது பிரதிபலிக்கும். நல்லாட்சிக்கும் மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள். கல்வி என்பது அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சிந்தனையோடு இருக்க வேண்டும். கல்விக் கூடத்தில் பழமை வாத சித்தாந்தங்களை பாஜக மட்டுமே தொடர்ந்து புகுத்தி வருகிறது. மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளது" என்று எம்பி ஜோதிமணி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE