அசான்சோல் தொகுதியில் பாடகருக்குப் பதில் களமிறங்கும் நடிகை... பாஜக போடும் பக்கா பிளான்!

By காமதேனு

மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த பாஜக வேட்பாளர் பாடகர் பவன் சிங், தான் போட்டியிடப் போவதில்லை என்று மறுத்து விட்ட நிலையில் நடிகை அக்ஷரா சிங்கை களமிறக்க பாஜக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பவன் சிங்

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. இதில், 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில், மேற்குவங்க மாநிலம் அசான்சோல் தொகுதியில் பிரபல போஜ்புரி பாடகர் பவன் சிங் (38) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக ஊடகங்களில் இவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

பவன் சிங் பாடிய பல திரைப்பட பாடல்கள், வங்காளப் பெண்களை கிண்டல் செய்தும், இழிவுபடுத்துவதாகவும் இருப்பதாக விமர்சனம் செய்தனர். பவன் சிங்குக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகுமாறு பவன் சிங்கை பாஜக அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து பவன் சிங் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். 'என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி. சில காரணங்களால், அசான்சோல் தொகுதியில் என்னால் போட்டியிட முடியாது' என அவர் தெரிவித்தார்.

நடிகை அக்ஷரா சிங்

இந்நிலையில் மற்றொரு பிரபல போஜ்புரி நடிகையான அக்ஷரா சிங்கை, அசான்சோல் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும். தேர்தல் அரசியலில் களமிறங்க அவர் யோசிப்பதாக கூறப்படுகிறது. இவரும் போட்டியிட மறுத்தால் பாஜக மூத்த தலைவர் ஜிதேந்திர திவாரியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE