ஜிபிஎஸ்-ஐ காட்டிலும் மிக துல்லியமான ‘நாவிக்’ வழிகாட்டி: இந்தியாவில் தயாராகும் செல்போன்களில் பயன்படுத்த திட்டம்

By KU BUREAU

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் ‘நாவிக்’ வழிகாட்டி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஜிபிஎஸ் கருவியை காட்டிலும், இது மிகத் துல்லியமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தேசியதொலையுணர்வு மைய இயக்குநர்பிரகாஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக தொலையுணர்வு நிறுவனம் சார்பில்புவி தகவலியல் பொறியாளர் அமைப்பு திறப்பு விழா, தேசிய தொலையுணர்வு நாள் மற்றும் தேசிய விண்வெளி தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் நிகழ்ச்சிக்கு தலைமைவகித்தார். இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் பிரகாஷ் சவுகான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் என்பது மிகவும் முக்கியம். 2040-ம் ஆண்டுக்குள் உலகபொருளாதாரத்துக்கு குறைந்தபட்சம் 10 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து கொண்டிருக்கிறது.

7 செயற்கைக்கோள்: ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு ஜிபிஎஸ்,‘கூகுள் மேப்’ போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு செயற்கைகோள்களின் பங்கு அளப்பறியது. ஜிபிஎஸ் கருவியைப் போலவே, இந்தியாசொந்தமாக 7 செயற்கைக்கோளுடன் இணைந்த ‘நாவிக்’ என்கிற வழிகாட்டியை உருவாக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் இந்த ‘நாவிக்’ கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் சிக்னலை காட்டிலும் ‘நாவிக்’ சிக்னல் மிகத் துல்லியமாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

ஏன் நிலவை தொடர்ந்து நாம்ஆராய்ச்சி செய்கிறோம் என்று பலர் கேட்கின்றனர். இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 140 கோடி. இந்த நூற்றாண்டு நிறைவடைவதற்குள் மக்கள் தொகை பல மடங்கு மேலும் உயரும். அப்போது நமக்கு இந்த பூமி போதாது. அதேநேரம், நிலவும் 3.84 லட்சம் கி.மீ தொலைவில்தான் உள்ளது. இது அதிக தூரமில்லை. ஒரு சக்தி வாய்ந்த ராக்கெட், 3 முதல் 5 நாட்களுக்குள் நம்மை நிலவுக்குக் கொண்டு சேர்த்துவிடும்.

சந்திரயான் திட்டம்: மேலும் நிலவில் ஏராளமான வளங்கள் மனித இனத்துக்கு பயன்படும் வகையில் உள்ளன. அவற்றை ஆராய்ச்சி செய்யவே சந்திரயான் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்மூலம் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் துறை தலைவர் கே.பி.ஜெயா, தொலையுணர்வு நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.வித்யா, புவிசார் தகவல் பொறியாளர்கள் சமூகத்தின் தலைவர் சி.உதயகுமார், பேராசிரியர் திவ்யப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE