அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை!

By KU BUREAU

சென்னை: ரூ.5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மூலமாக மீட்டு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புபிரிவின் காவல்துறைத் தலைவர் இரா. தினகரனின் வழிகாட்டுதலின் படியும் காவல் கண்காணிப்பாளர் இரா. சிவக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தி தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர் இணைய தளங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, 2008 ம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட "Gold of the Gods" என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்படத்தினை வளைத்தளத்தில் கண்டறிந்தனர்.

பின்னர் பல்வேறு இணையதளங்களில் மேற்காணும் சிலை குறித்த தகவல்களையும் தனிப்படையினர் சேகரிக்கத்தொடங்கினர். அப்போது "Hold on your Hat: Antiquities dealer Douglas Latchford, a/k/a Pakpong Kriangsak" என்ற பெயரில், ஒரு கட்டுரை 27.09.2019 அன்று "Association for Research Crimes Against Art" (ARCA) என்ற இணையதளத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ்லாட்ச் ஃபோர்டு என்பவர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை தனிப்படையினர் கண்டறிந்தனர்.

இவர் பன்னாட்டு கள்ளச் சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்துவருபவர் என்பதையும் கண்டறிந்தனர். மேலும் தொடர் விசாரணையில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ளது தெரியவந்தது.

மேலும் டக்ளஸ்லாட்ச்ஃபோர்டு என்பவர் (2020 ம் ஆண்டு இறந்துவிட்டார்) இச்சிலையை சுபாஸ் சந்திர கபூரிடமிருந்து 2005 ம் ஆண்டு அமெரிக்க டாலர் மதிப்பில் 6,50,000 (இந்திய மதிப்பில் ரூ. 5.2 கோடி) வாங்கியதும், நான் சிவைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஸ் சந்திர கபூருக்கு மேற்காணும் சிலை குறித்தான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்துவந்துள்ளார் என்பதையும் கண்டறிந்தனர்

இச்சிலையானது தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர்காலமான 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இச்சிலை 2005 ம் ஆண்டிற்கு முன்னர் சுபாஸ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு விற்கப்பட்டு இருந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிலைத்திருட்டு தடுப்புபிரிவு வழக்கு பதிவுசெய்து புலன்விசாரணை அதிகாரியாக கோ. பாலமுருகன் நியமிக்கப்பட்டார்.தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினரின் முயற்சியால் இந்த சிலையை அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு (HIS) கைப்பற்றி பாங்காங் அரசிடம் 11.10.2023 ல் ஒப்படைத்தனர். பின்னர் பாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து தாய்லாந்து அரசாங்கத்தினரால் 25.06.2024 ல் இந்திய தொல்லியல்துறைக்கு இச்சிலை அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 04.09.2024 அன்று தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவு தனிக்குழுவினரிடம் இந்த சிலையை தொல்லியல் துறை ஒப்படைத்தது. இந்த சிலை எந்த கோயிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்திட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மீட்கப்பட்ட இந்த உலோக சிலையினை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டு, சிலையினை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினரை பாராட்டினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE