பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஆசிரியர் தினத்தையொட்டி கோரிக்கை

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றும் விதமாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் கருணாநிதி 2016 சட்டமன்ற தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி போலவே, முதல்வர் ஸ்டாலினும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் வாக்குறுதியை கொடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின் நடத்திய விடியல் பயணத்தில், தருமபுரி, மயிலாடுதுறை, கன்னியாகுமரியில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடியபோது, திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வேன் என்றார். இந்த வாக்குறுதியை நம்பித் தான் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களும் காத்துள்ளோம். ஏற்கெனவே ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக இந்த ஆண்டு ரூ,2,500 ஊதிய உயர்வு மட்டுமே அளித்துள்ளது.

இதையும் சேர்த்து தற்போது கிடைக்கும் ரூ.12,500 சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியுமா என்பதை முதல்வர் ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ரூ.30 ஆயிரமாவது பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

மே மாதமும் சம்பளத்துடன், அனைத்து வேலை நாட்களிலும் முழு நேர வேலை வழங்கி 13 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் செய்து வரும் வேலையை முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE