பழநியில் மாணவர்கள் உதவித்தொகை நிதியில் கையாடல்: பள்ளி ஆசிரியை கைது 

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் உதவித்தொகைக்கான நிதியில் கையாடல் செய்த பெண் ஆசிரியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சின்னக்கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயா, ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இதே பள்ளியில் தலைமையாசிரியராக இருந்துள்ளார். அப்போது, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கிய உதவித் தொகை நிதியில் லட்சக் கணக்கில் கையாடல் செய்தது தெரியவந்தது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பழநி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஆசிரியை விஜயாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை கையாடல் செய்த வழக்கில் பள்ளி ஆசிரியை கைதான சம்பவம் பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE