திமுகவில் சேர்ந்த குமாரகோயில் மேல்சாந்தியை அறநிலையத் துறை பணியில் இருந்து நீக்கக் கோரி மனு

By எல்.மோகன்

நாகர்கோவில்: திமுக கட்சியில் சேர்ந்த குமாரகோயில் மேல்சந்தியை அறநிலையத் துறையில் அரசு பணியில் இருந்து நீக்கக் கோரி குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

விஷ்வஹிந்து பரிஷத் சார்பில் மாநில அமைப்பாளர் காளியப்பன் தலைமையில் நிர்வாகிகள் இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில்,"இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற குமாரகோயில் முருகன் கோவிலில் இந்து அறநிலையத் துறையின் அரசு பணியான மேல்சாந்தியாக ஜெயராம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அரசு மூலம் சம்பளம் பெற்று கொண்டு, திமுக கட்சியில் சேர்ந்துள்ளார்.

தக்கலையில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் பங்கேற்றுள்ளார். அறநிலையத் துறையின் அரசு பணியில் இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது. ஆனால் அப்பட்டமாக ஒரு கட்சியில் இணைந்து அதில் அரசியல் வாதியாக செயல்பட்டு விட்டு, பல ஆயிரம் இந்துக்களின் நம்பிக்கையை பெற்ற குமாரகோயிலில் மேல்சாந்தியாக பணியாற்றுவதை பக்தர்களால் ஏற்றுகொள்ள முடியாது.

தக்கலையில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் பங்கேற்ற மேல்சாந்தி ஜெயராம்.

எனவே குமாரகோவில் மேல்சாந்தி ஜெயராமை அரசு பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த கட்சியிலும் இல்லாத நடு நிலையாக உள்ள ஆன்மீக ஈடுபாடு உள்ளவரை குமாரகோயில் மேல்சாந்தியாக நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE