தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை 

By KU BUREAU

திருச்சி: தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருச்சி விமான நிலையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘குரங்கு அம்மை நோய்க்குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கோவையிலும் ஏற்கனவே நான் நேரடியாக சென்று, அங்கே பரிசோதிக்கும் முறையை ஆய்வு செய்து இருக்கிறேன். இன்றைக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இது சம்பந்தமாக ஆய்வை மேற்கொண்டோம்.

டெங்கு காய்ச்சல் தொடர்பாக நேற்று சென்னையில் 11 துறைகளை ஒருங்கிணைத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கூட்டம் நடத்தப்பட்டது. டெங்கு காய்ச்சல் பொறுத்தளவில் கடந்த கால வரலாற்றில் 2012-ம் ஆண்டு 67 பேர் பலியாகி உள்ளனர் அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு 65 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது 8 மாதங்கள் முடிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவ மழை, கோடை காலத்தில் பெய்கின்ற மழை என 3 மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். ஆனால் தற்போது மாதம்தோறும் மழை பெய்து கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக தேங்கி நிற்கும் தண்ணீர் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு என்பது 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் இறப்பு என்பது 4 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. அந்த 4 பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்துள்ளது. மேலும், அதிலும் ஒரு சிலர் மருத்துவமனைக்கு வராமலேயே இறந்துள்ளனர். இன்னும் அடுத்து வர இருக்கிற நான்கு மாதங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அதனால் எல்லாத் துறைகளும் ஒருங்கிணைத்து இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என நேற்றைய தினம் அறிவுறுத்தப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE