வெள்ளகோவில் காவல் நிலையத்தில் பூஜை நடந்ததாக புகார்: விளக்கம் கேட்டு ஆய்வாளருக்கு மெமோ

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: வெள்ளகோவில் காவல் நிலையத்தில் பூஜை நடத்தப்பட்டதாக பல்வேறு அமைப்பினர் புகார் அளித்த நிலையில், காவல் ஆய்வாளருக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

காங்கயம் வட்டத்தில் உள்ள வெள்ளகோவில் காவல் ஆய்வாளராக ஞானப்பிரகாசம் உள்ளார். இந்த நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் கடந்த 26ம் தேதி அதிகாலை பூஜை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் காங்கயம் டிஎஸ்பி-யிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உரிய விளக்கம் தரக்கோரி காவல் ஆய்வாளர் ஞானப் பிரகாசத்துக்கு மெமோ அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஞானப்பிரகாசம் கூறும்போது, “வாரந்தோறும் காவல் நிலையத்தைச் சுத்தம் செய்வது வழக்கம். அன்றைய தினமும் சுத்தம் செய்து, சாம்பிராணி போட்டோம். மற்றபடி பூஜைகள் எதுவும் செய்யவில்லை. பூஜை எதற்காக போட வேண்டும்? இது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். தான் நடந்ததை தெரிவித்துவிட்டேன்” என்று ஆய்வாளர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE