அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது - சிபிசிஐடி போலீஸார் அதிரடி!

By KU BUREAU

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை கரூரில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கரூர் குன்னம்பட்டியில் 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், அவரது சகோதரர் சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், சேகருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் தேடப்பட்டு வரும் சேகரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE