வன்கொடுமை சட்டத்தில் சீமான் மீது வழக்கு பதிவு: பட்டாபிராம் போலீஸார் நடவடிக்கை

By KU BUREAU

திருவள்ளூர்: சீமான் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ், பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடலை பாடினார். இது தொடர்பான வழக்கில் திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதனால், கோபம் அடைந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர் சந்திப்பில், கருணாநிதி குறித்த அந்த பாடலை பாடியவர்கள் மற்றும் எழுதியவர்களை விட்டு விட்டு தற்போது அந்த பாடலை பாடியசாட்டை துரைமுருகனை ஏன் கைது செய்ய வேண்டும், நானும் கருணாநிதி குறித்த அந்த பாடலை பாடுகிறேன் முடிந்தால் என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யுங்கள் என தடை செய்யப்பட்ட அந்த வார்த்தையை பயன்படுத்தி அதே பாடலை பாடினார்.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் திமுகவினர் புகார் அளித்தனர்.

அதன்படி, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமை சேர்ந்த வழக்கறிஞர் அஜேஷ் என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அஜேஷ் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்திடம் சீமான் குறித்து வழக்கறிஞர் அஜேஷ் புகார் அளித்தார். இதனை விசாரித்த எஸ்சி - எஸ்டி ஆணையம் சீமான் அவதூறாகப் பேசியது குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைஎடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE