நீதிமன்ற தீர்ப்பை மதித்து அதிமுக கொடிக்கம்பங்களை அகற்றி அதிமுக அடையாளங்களை வெள்ளை நிற பெயின்டால் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அழித்தன சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
அதிமுக தலைமையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்ட நிலையில் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அதிமுக கொடி, சின்னங்களை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த தடையை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து தனது காரில் இருந்து அதிமுக கொடியை ஓபிஎஸ் கழற்றிவிட்டார். இதேபோல் அவரது ஆதரவாளர்களும் அதிமுக கொடியை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் நெல்லை மாவட்டம், இட்டமொழியில் அதிமுக கொடி கம்பத்தை வெள்ளைப் பெயின்டால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அழித்தனர். மேலும் சுவரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு நடுவில் இருந்த இரட்டை இலை சின்னத்தையும் வெள்ளை பெயின்டால் மறைத்தனர்.