நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

By காமதேனு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அனுமதியின்றி ஏற்றியதாக அக்கட்சியினர் மீது முதன்முதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி கட்சிக்கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம், நெடுமானூர் மட்டிகை ஆகிய ஊர்களில் விஜய் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த்

அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கட்சிக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஆனால் இதற்கு போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி கட்சிக்கொடி ஏற்றிய விஜய் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், கட்சிக் கொடியும் அகற்றப்பட்டது.

அத்துடன் அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீஸார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். விஜய் கட்சி தொடங்கிய பின்னர் கட்சியினர் மீது வழக்கு பாய்வது இது முதன்முறையாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE