சென்னையில் நாளை தொடங்கும் ஃபார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை இல்லை: விதிமுறைகளைப் பின்பற்றி நடத்த நீதிபதிகள் அனுமதி

By KU BUREAU

சென்னை: சென்னையில் நாளை தொடங்கவுள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி போட்டியை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம்ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் தீவுத்திடலைச் சுற்றிலும் உள்ள வட்டவடிவ சாலையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த கார் பந்தயத்துக்குத் தடை விதிக்கக்கோரி பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘பந்தயம் நடைபெறவுள்ள தீவுத்திடல் வழித்தடத்தில் அரசு மருத்துவமனைகள் இருப்பதால் சீறிப்பாயும் வாகனங்களின் சப்தம் காரணமாக நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இந்த சாலையில் கார் பந்தயத்தை நடத்துவது மோட்டார் வாகன விதிகளுக்கும் எதிரானது. எனவே இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க வேண்டும்’’ எனகோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வீில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பி்ல் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, ‘‘பந்தயம் நடத்த அரசு செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பந்தயம் நடத்தும் தனியார் அமைப்புதான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. கார் பந்தயம் நடத்துவதற்கான வழித்தடத்தை ஆய்வு செய்து சர்வதேச அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்த பந்தயத்தை இருங்காட்டுக் கோட்டையில் சுற்றுச்சுவருடன் கூடிய சுற்றுப்பாதையில் நடத்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் பந்தயத்தை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, ‘‘ஏற்கெனவே கார் பந்தயத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்களின் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும், ஒலி கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும் எனவும் 7 நிபந்தனைகளை விதித்து, பந்தயம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்த நிபந்தனைகளையும் மீற வில்லை.

மருத்துவமனைகளுக்கு செல் வோருக்கும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் எந்தவொரு இடையூறும் ஏற்படாது. பந்தயம் இரவு நேரத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. அப்போது மட்டும் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும்.

இந்த பந்தயம் தொடர்பாக ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மீண்டும் அதே காரணத்துக்காக இந்த வழக்கு அரசியல்ஆதாயத்துக்காக உள்நோக்கத் துடன் தொடரப்பட்டுள்ளது. பந்தயம்நடக்கும் தினத்தன்று காலையில்தான் எஃப்ஐஏ எனும் சர்வதேச கூட்டமைப்பு ஆய்வு செய்து உரிமம் வழங்கும்’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்தகார் பந்தயம் தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்திருந்தனர்.

அதன்படி பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த கார் பந்தயத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதாகக் கூறி தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், எஃப்ஐஏ எனும் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் தரச்சான்று பெற்ற பிறகே, கார் பந்தயம் நடத்தப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.

அதையடுத்து நீதிபதிகள் நேற்றுமாலை பிறப்பித்த உத்தரவில், ‘‘பந்தயம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில், பொது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இந்த கார் பந்தயத்தை உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்திக் கொள்ளலாம்.

பந்தயம் நடத்தும் நாளில் 12 மணிக்குள் அதற்கான தரச்சான்றை எஃப்ஐஏ அளிக்க வேண்டும். அந்த சான்றிதழை மனுதாரர் தரப்புக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால் அதை நீதிமன்றம் தீவிரமாகக் கருதும்’’ என தெரிவித்து, போட்டிக்கு அனுமதியளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு 6 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE