வாகனங்களில் ‘டாக்டர்’ என ஸ்டிக்கர் ஒட்டிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

By KU BUREAU

சென்னை: ‘டாக்டர்’ என்பதைக் குறிக்கும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், தவறான நோக்கத்துடன் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று போலீஸார் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளரான மருத்துவர் கே.னிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘போலீஸாரின் இந்த அறிவிப்பால் அவசர நிமித்தமாக செல்லும் மருத்துவர்கள் அவதிக்குள்ளாக நேரிடும்’ என தெரிவித்திருந்தார் இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உயிர் காக்கும் மருத்துவ அவசரத்துடன் செல்லும் மருத்துவர்களுக்கு வாகனங்களி்ல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கலாமே என்றும், பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு ஸ்டிக்கர் வழங்குவது போல தேசிய மருத்துவ ஆணையமும் மருத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கரை விநியோகிக்கலாமே என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த வழக்கில் தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியோரையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் ஜூன் 14-க்கு தள்ளிவைத்துள்ளார். அதுவரை ‘டாக்டர்’ என்பதைக் குறிக்கும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

அதேநேரம் தவறான நோக்கத்துடன் ‘டாக்டர்’ என்ற ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டியிருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், வாகனங்களின் நம்பர் பிளேட்களி்ல் எக்காரணம் கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE