இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை: 2 பேருக்கு சிறை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இரண்டு படகுகளின் ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுலை 23-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின், செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன.

படகுகளிலிருந்த ஆரோக்கிய ஹரி கிருஷ்ணன் (50), சகாய ராபர்ட் (49), யாகோப் (29), முத்துராமலிங்கம் (65) ராதா (44) சேகர் (40), பொன் ராமராஜ் (26), ராம்குமார் (24), லிபின் சாய் (25) ஆகிய 9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 7 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், முதல் விசைப்படகின் ஓட்டுநர் ஹரி கிருஷ்ணன் சகாய ராபர்ட் என்பவர் இரண்டாவது முறையாக சிறை பிடிக்கப்பட்டதால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதமும், இரண்டாவது படகின் ஓட்டுநர் சகாய ராபர்ட் என்பவருக்கு ஒரு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தண்டனை வழங்கப்பட்ட இரண்டு மீனவர்கள் கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE