சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் நேரம், நிறுத்துமிடங்கள் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத்ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களின் சேவையை பிரதமர் மோடி 31-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இந்த ரயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரயில் நிலையங்களின் விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலிக் காட்சிமூலமாக தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை சென்ட்ரலில் தொடக்க விழா நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரயில் நிலையங்கள் விவரம் உட்பட பல்வேறு தகவல்களை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627-20628) வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதியம் 1.50மணிக்கு அடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதேபோல் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான வந்தேபாரத் ரயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும். மறுமார்க்கமாக, பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும்.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE