மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

By காமதேனு

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம், கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இலக்கிய விழாக்கள், ரத்ததான முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று தனியார் துறையினர் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகப்பட்டினம், கடலூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, செங்கப்பட்டு, தஞ்சாவூர்,சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 17) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE