பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முத்திரைத் தாளில் எழுதப்பட்ட ஆவணம் பழநியில் கண்டெடுப்பு

By ஆ.நல்லசிவன்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கி.பி.19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளில் எழுதப்பட்ட ஆவணம் கிடைத்துள்ளது.

பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கணியர் ஞானசேகரன் உதவியுடன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தொல்லியல் ஆயவாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: ''இந்த ஆவணம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாள் என்பதும், அதை பாலசமுத்திரம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா எழுதி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த முத்திரைத்தாள் 10.5-க்கு 16.5 செ.மீ. அளவில் உள்ளது.

இந்த ஆவணம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா சொல்படி எழுதப்பட்டு இறுதியில் அவருடைய கையொப்பமும் இடப்பட்டுள்ளது. ஆவணம் மொத்தம் 31 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. தனது ஜமீன் பண்ணையின் 23 ஏஜென்டுகள் பெயர்களை எழுதி அதை மேனேஜர்களின் விபரப் பத்திரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளில் பதிந்து வைத்திருக்கிறார்.

23 மேனேஜர்கள்; இந்த விவரப் பத்திரம் ஈஸ்வர ஆண்டு மாசி மாதம் 9-ம் தேதி எழுதப்பட்டுள்ளது. இது 1818 பிப்ரவரி 21-ம் தேதி ஆகும். ஒரு கடினமான தாளில் இந்தப் பத்திரம் உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்டவடிவமான கட்டண முத்திரையானது, பத்திரத்தாளின் இடது மேல்புறம் 'இன்டாக்ளியோ' எனப்படும் அச்சு முறையில் இரண்டணா என்று தமிழ் (இரண்டணா) ஆங்கிலம் (Two Anna) உருது (தோஅணா) தெலுங்கு (இரடுஅணா) மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

மேல் வலதுபுறத்தில் கம்பெனியின் வட்ட வடிவ கருவூல முத்திரையில் பொக்கிசம் என்று தமிழிலும் டிரசரி (Treasury) என்று ஆங்கிலத்திலும், கஜானா என்று உருதிலும், பொக்கிசமு என்று தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளது.

அன்றைய காலகட்டத்தில் பத்திரப்பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது இந்த பத்திரத்தின் மூலம் தெரிய வருகிறது. பத்திரத்தில் உள்ள 23 மேனேஜர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயர்களின் மூலம் அறிய முடிகிறது.

10 வகையான சாதியைச் சேர்ந்த மேனேஜர்களின் பெயர்கள் அதில் உள்ளன. மேனேஜர்களில் முதலில் கட்டைய கவுண்டன் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சாயபு, சாம்பான், குடும்பன், தேவன், ராவுத்தன், செட்டி, நாயக்கன், பிள்ளை, அய்யன் என்று பெயர்களுக்குப் பின்னால் சாதிகள் குறிக்கப்படுகின்றன.

30 பொன் வராகன் சம்பளம்: இந்தப் பத்திரத்தை எழுதிய சின்னோபளம்மாவின் கணவரான ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியரால் பிடிக்கப்பட்டு சென்னையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் மனைவியான சின்னோபளம்மா கம்பெனியரால் பெயரளவுக்கு ஜமீன்தாரினி ஆக்கப்பட்டார். ஜமீனின் உண்மையான ஆட்சி அதிகாரம் கம்பெனியிடம் மாறியது.

சின்னோபளம்மா கம்பெனியிடம் இருந்து மாதாந்தோறும் 30 பொன் வராகன் சம்பளமாகப் பெற்றுள்ளார். சின்னோபளம்மா இறந்தபிறகு கம்பெனியின் வாரிசில்லா சட்டம் மூலம் பாலசமுத்திரம் ஜமீன் நேரடியாக கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது. சின்னோபளம்மா பெயரளவுக்கான ஜமீன்தாரினியாக இருந்த காரணத்தாலும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முழு அதிகாரமும் பாலசமுத்திரம் ஜமீன் மீது இருந்துள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE