சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

By KU BUREAU

சென்னை: சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு முதல் முறையாக ஜூன் 20-ம்தேதி வருகை தர திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவந்தனர்.

இதற்கிடையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்திவைக்கபட்டது. இதன்பிறகு, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னை வருகை பற்றி அவ்வப்போது தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், மோடி வருகை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சென்னை - நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வரும் 31-ம் தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, பெங்களூர் - மதுரை வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ம்தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னைக்கு பிரதமர் மோடி வருவது தொடர்பாக தகவல் இல்லை. பெங்களூரில் இருந்து திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. என்னென்ன திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பது தொடர்பாக ஓரிரு நாளில் முழு விவரம் தெரியவரும்.

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE