இலங்கை வசமுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By கி.கணேஷ்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனே விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்தறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 116 இந்திய மீனவர்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதேபோல் தமிழக மீனவர்களின் 184 படகுகளும் இலங்கை அரசின் வசம் உள்ளது.

மீனவர்கள் இது போன்று தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், அவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மடடுமின்றி, அவர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிக்கிறது. எனவே, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் இயந்திரப்படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE