உடல் உறுப்புகளை தானம் செய்த விவசாயி உடலுக்கு அரசு மரியாதை

By KU BUREAU

மதுராந்தகம்: லத்தூரை அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைபாபு என்பவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு சார்பில் மதுராந்தகம் கோட்டாட்சியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த லத்தூர் குறுவட்டம், நெ. 84, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாபு(59). விவசாய தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைபாபு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் அளிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து துரைபாபுவின் உடலுக்கு, அரசு சார்பில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE