மத்திய பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் கருத்து

By KU BUREAU

திருச்சி: ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மட்டுமே நிறைவேற்றும் நிலை தொடர்ந்தால், மத்திய பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா டிச. 26-ம் தேதி தொடங்கி, ஓராண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பதே இந்த நூற்றாண்டு விழாவின் அறைகூவலாகும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக செப். 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்த கட்சியின் தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். ஆனால், வயநாடு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, எதையும் அறிவிக்கவில்லை.

மத்திய பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மட்டுமே நிறைவேற்றும் நிலை தொடர்ந்தால், மத்திய அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. நடிகர் விஜய் தற்போதுதான் கட்சிக் கொடியை அறிமுகம் செய்துள்ளார். அவர் கட்சியை தொடங்கி நடத்தட்டும். பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவிப்போம். இவ்வாறு முத்தரசன் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE