திமுக ஆட்சி அறநிலைய துறையின் பொற்காலம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

By KU BUREAU

சென்னை: திமுக அரசு எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கிறது. அறநிலையத் துறையின் பொற்காலம் திமுக ஆட்சிதான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பழநியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டு நிறைவு விழாவில் காணொலி வாயிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முத்தமிழ் முருகன்மாநாடு திடீரென நடத்தப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு,அறநிலையத் துறை சார்பில் ஏராளமான சாதனைகளை செய்துவிட்டுத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. திமுக அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்பதில்லை. எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் பொற்காலமே திமுக ஆட்சிதான்.

நீதிக்கட்சி ஆட்சியின்போது அறநிலையத் துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை பூசிக் கொண்டவர் பெரியார். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முழங்கினார் அண்ணா. ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தவர்தான் கருணாநிதி. இப்படிப்பட்ட தலைவர்கள் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத் துறை சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளில் 1,400-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.5,600 கோடி மதிப்பிலான, 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.3,800 கோடிமதிப்பில், 8,500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு கோயில்களில் உணவு வழங்கப்படுகிறது.

எல்லோருக்கு எல்லாம் என்பதுதான் திராவிடம். இது யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம்தான், அனைத்து சாதியினர், மகளிர் ஆகியோரை அர்ச்சகர்களாக்கிய முதல்வரின் நடவடிக்கை. அதேபோல, அனைத்துகோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசைப்போல, அறநிலையத் துறையும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமின்றி, தமிழகப் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. திமுக அரசின் இந்த முயற்சிகளை, ஆன்மிகப் பெரியவர்கள், பக்தர்கள் பாராட்டுகின்றனர். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE