தமிழக தொழில்களை காப்பாற்றாமல் வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பன்னீர் தெளிக்கிறார் முதல்வர்: பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள தொழிலை காப்பாற்றாமல் வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு பன்னீர் தெளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார் என முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காந்திநகர், வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் இன்று (ஆக. 25) நடந்தது. திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார்.

ஒவ்வொரு பூத் முகவரிடமும், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் குறித்து ஆய்வு செய்தார். நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு தொகுதியில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் முன்னிலையில், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர், தேர்தலுக்குப் பின்பு நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகிறது, இரவு நேரங்களில் மக்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இது தான தமிழ்நாட்டுக்கு திமுக தந்துள்ள பரிசு.

திருப்பூரில் தொழில் மிகவும் நசிந்து விட்டது, பனியன் தொழில் காலி ஆகிவிட்டது, விசைத்தறி இயந்திரங்கள் எல்லாம் உடைத்து விற்கப்படுகிறது. இனி திருப்பூரில் தொழில் இருக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது? ரஜினியின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரிலீசாக வேண்டும் என்பதற்காகவே, அவர் திமுகவை பாராட்டி பேசி வருகிறார். தமிழகத்தில் அனைத்து சினிமாக்களும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்களால் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகிறது, அதனால் ரஜினி மட்டுமல்ல, சினிமா துறையைச் சார்ந்த அனைவரும் பாராட்டித்தான் பேசுவார்கள்.

திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய கூட்டணி உருவாகி உள்ளது. இரண்டு கட்சிகளும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளது அதனால்தான் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நாணயத்தை தமிழகத்திற்கு வந்து வெளியிட்டுள்ளார், மேலும் முதல்வர் ஸ்டாலின், ராஜ்நாத் பேசியதை நினைத்து தூக்கமே வரவில்லை என்று சொல்லி உள்ளார். இதற்கு காரணம் அமெரிக்கா செல்லும் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ், உள்ள காவல்துறை செயல்படவில்லை. திமுக ஆட்சி வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும். வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று, பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்.

பனியன், பாத்திரம், விசைத்தறி, மேலும் தமிழகத்தில் உள்ள பல தொழில்களை காப்பாற்றாமல், தொழில்துறையினரை 3 ஆண்டு காலமாக சந்திக்காமல் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடு சென்று அங்குள்ள தொழில்துறையினரை அழைத்து வருவது என்பது நகைச்சுவையாக உள்ளது, வேரிலே வெந்நீரை ஊற்றிவிட்டு, அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்களுக்கு பன்னீர் தெளிக்க செல்கிறார் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE