மீஞ்சூர், பூந்தமல்லி, செங்குன்றம், வண்டலூர் பகுதிகளின் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த திட்டம்: சிஎம்டிஏ தகவல்

By KU BUREAU

சென்னை: சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை வெளி வட்டச் சாலையை முக்கியமான வளர்ச்சி வழி்த்தடமாக மாற்றும் வகையில், இருபுறமும் ஒரு கி.மீ அகலத்தில், 62 கி.மீ நீளத்துக்கு அமைக்க திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம்.

வெளிவட்டச்சாலை வழித்தடத்தின் வளர்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் ஆகிய 4 குறிப்பிட்ட பகுதிகளை அவற்றின் தனித்துவமான பொருளாதார சூழல்களைக் கருதி கண்டறிந்துள்ளோம்.

இந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு பொருளாதார நடவடிக்கைகளை கலவையாக நாங்கள் வகுத்துள்ளோம். இப்பகுதிகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உறுதி செய்ய, தொழில்துறை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், சிப்காட், டிட்கோ மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) ஆகியவற்றுடன் இணைந்து எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கான குறுகியகால மற்றும் இடைக்கால வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

மேலும், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் போன்ற எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள திட்டங்களை உள்ளடக்கி, வெளிவட்டச் சாலையுடன் கூடுதலாக, மல்டி மாடல் போக்குவரத்து தி்ட்டங்களையும் இணைத்து செயல்படுத்தும் திட்டமும் உள்ளது.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் நிதி வழிமுறைகளுக்காக வெளி வட்டச்சாலைக்கான பொருளாதார திட்டத்தை தயாரித்து வருகிறோம். மேலும், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், விரிவான வளர்ச்சித்திட்டத்தின் வரைவை இறுதி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE