தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் (29). இவர் இன்று வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்து, பின்னர் தனுஷ்கோடி கடற்கரைக்குச் சென்றுள்ளனர். தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் எதிர்புறம் மது அருந்தி விட்டு மீன் சாப்பிட்டவர், கை கழுவுவதற்காக தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் இறங்கியுள்ளார். அப்போது திடீரென அலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

உடன் வந்த நண்பர்கள் தனுஷ்கோடி மீனவர்களின் உதவியுடன் அரவிந்தை மீட்க முயற்சிப்பதற்குள் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மெரைன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் அரவிந்த் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE