தவெக கட்சிக் கொடி அறிமுகம்: பழநியில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: த.வெ.க.,கட்சிக் கொடி இன்று அறிமுகம் செய்ததை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர். இதையடுத்து, திண்டுக்கல் மற்றும் பழநி பேருந்து நிலையத்தில் அக்கட்சியின் தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE