மண்டபம் கடற்பகுதியில் 450 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர காவல்படை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட 450 கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் நிலைய கடலோரக் காவல்படையினர் ரோந்து பணியின் போது மண்டபம் வடக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நாட்டுப் படகு கரையை நோக்கி வருவதை பார்த்ததும், படகை கடலோரக் காவல்படையினர் நெருங்கிச் சென்றனர். உடனே படகில் இருந்தவர்கள் கடலோரக் காவல்படையினரின் ரோந்துப் படகை பார்த்ததும், தங்கள் நாட்டுப்படகை கரையில் விட்டு தப்பி ஓடினர்.

தொடர்ந்து நாட்டுப்படகை பறிமுதல் செய்து கடலோர காவல்படையினர் சோதனையிட்டதில், படகில் சாக்குப் பைகளில் சுமார் 450 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. பின்னர் பறிமுதல் செய்த கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் குறித்து வனத்துறையும், மண்டபம் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE