காலிப் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - மின் பகிர்மான கழகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By KU BUREAU

சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 36,000 காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய கேங்மேன் சங்கத்தினர் நாளை போராட்டம் அறிவித்திருந்தனர். பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

விழா காலங்கள் நெருங்கி வரும் நிலையில் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பொது நலனை கருத்தில் கொள்ளாமல், தங்களது சுயநலத்திற்காக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின் வாரியம் கடுமையான நிதி நெருக்கடி சந்தித்து வருவதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அப்போது மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், தாங்கள் அறிவித்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தமிழக முழுவதும் மின் பகிர்மான கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் கேங்மேன்களை மின் இணைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதாகவும் , தகுதி இல்லாத இந்தப் பணிகளில் தங்களை பயன்படுத்துவதனால் மூன்று ஆண்டுகளில் மின் விபத்து ஏற்பட்டு 70 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மின்வாரிய தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கேங்மேன் தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து, பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஒப்பந்தம் அல்லது தற்காலிகமாக காலி பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE