பாஜக கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்: மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து

By KU BUREAU

பல்லடம்: பாஜக கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் கிளையை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திறந்துவைத்து, மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து, பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.பழனிசாமி நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல, அத்திக்கடவு - அவிநாசி 2-வது திட்டத்தை தொடங்க வேண்டும். மேலும், ஆனைமலை - நல்லாறு திட்டம் மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

பெருமாநல்லூரில் போராட்டத்தின்போது உயிரிழந்த 3 விவசாயிகளுக்கு பாஜக சார்பில் மணி மண்டபம் கட்டுவோம். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா, மாநில அரசு நடத்திய விழாவாகும். மத்திய அரசு சார்பில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை. ஒருவரது காலில் விழுவதுதான் தவறு. முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நான் தரகர்போல செயல்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ள உறவு என்று கொச்சையான வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போல அவரது பேச்சு இல்லை.

பாஜக கூட்டணி மாமன், மச்சான் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக, திமுக, பாஜக ஆகியவை பங்காளிகள்தான். பங்காளிகள் ஒன்று சேருவதில்லை. ஆனால், எங்கள் தலைமையிலான மாமன்-மச்சான் கூட்டணி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் கூட்டணியாகும். நடிகர் விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE