பர்கூரில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை எதிரொலி: என்சிசி, என்எஸ்எஸ் முகாம்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகள்

By KU BUREAU

சென்னை: பர்கூர் அருகே என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தின் எதிரொலியாக, தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்கள் நடத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்கள் நடத்த பல்வேறு புதிய கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில் என்எஸ்எஸ், என்சிசி, சாரணியர் இயக்கம், ஜேஆர்சி உள்ளிட்ட அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாக பதிவுசெய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவற்றின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முறையான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.

வழிகாட்டு நெறிமுறை: பயிற்சி அளிக்கும்போது மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு ஆசிரியைகள் மட்டுமே பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும். மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும்.

அமைப்புகளின் செயல்பாடுகள் பள்ளி வளாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில்பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்போது உரிய அமைப்பின் (என்எஸ்எஸ், என்சிசி, ஜேஆர்சி) மாவட்ட அல்லது மாநில பொறுப்பாளர்களின் கடிதத்தின் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரிக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டும். மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பயிற்சி முகாமும் நடத்த ஏற்பாடு செய்யக்கூடாது.

பள்ளி அளவிலோ, மாவட்ட மற்றும் மாநில அளவிலோ முகாம்கள் நடத்தும்போது மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆண் ஆசிரியர்களும், மாணவிகளின் பாதுகாப்புக்கு ஆசிரியைகளும் சம்பந்தப்பட்ட அமைப்பின் விதிமுறைகளின்படி போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் பாதுகாப்பு இல்லாமல் எந்தவொரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவிகளை முகாம்களில் ஈடுபடுத்தக் கூடாது.

மேலும் பயிலும் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ முகாம் நடத்தப்பட வேண்டியிருந்தால் ஒவ்வொரு மாணவ, மாணவியின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதிபெற்று அதன்பிறகே மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் மாணவ, மாணவிகளை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்டகல்வி அலுவலர்கள் (தனியார்பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE