மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அரசியல் பேட்டியா? - ஆர்.பி.உதயகுமாருக்கு பாஜக கண்டனம்

By கி.மகாராஜன்

மதுரை: மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அதிமுக முன்னாள் ஆர்.பி.உதயகுமார் அரசியல் பேட்டிகள் அளிப்பது கண்டனத்துக்குரியது என மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் நினைவாக அமைந்திருக்கும் புனித இடமாகும். இந்தியாவின் விடுதலைக்காக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அரையாடை அணிந்து போராடிய மகாத்மா காந்தியின் நினைவாக, அவர் மேலாடையை துறந்த மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இது என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட கண்ணியமான காந்தி அருங்காட்சியகத்துக்கு அரசியல், ஜாதி, மத சாயம் பூசக் கூடாது. இதை கெடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் இருந்து அரசியல் பேட்டிகளை அளித்து வருகி்றார். இதை பாஜக கண்டிக்கிறது. காந்தி அருங்காட்சியக வளாகத்தில் ஆர்.பி.உதயகுமார் அரசியல் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதை ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து செய்தால் அவரது ஊழல் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுவோம்" என்று மகா சுசீந்திரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE