“முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை:"கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழாவா என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு அக்ஷயபாத்திரம் நிறுவனத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை நெல்லை பாலு செய்திருந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், தமிழரசன், மாணிக்கம், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட பேரவை செயலாளர் தமிழ் அழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது தமிழகத்தில் மக்களிடத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது கருணாநிதி நாணய வெளியீட்டு விழா தான். கருணாநிதியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக கட்சிக்காரர்களை விட புகழ்ந்து பேசி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் எனக்கு தூக்கம் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியுள்ளார்.

நீங்கள் தான் ஒருமுறை, “அமைச்சர்கள் கண்ணா, பின்னாவென்று பேசிவது எனக்கு தூக்கத்தை கெடுத்துவிட்டது” என்று திமுக கூட்டத்தில் பேசியுள்ளீர்கள். எனக்கு தூக்கம் நன்றாகவே வருகிறது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் தூக்கத்தை தொலைக்கவிடாமல் அமைச்சர்கள் பார்த்துக் கொண்டால் சரி. இன்றைக்கு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பெயர் இடம் பெற்றுள்ளது, ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளது, துரைமுருகன் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தலைமைச் செயலாளர்தான் அழைப்புகள் கொடுத்துள்ளார். இந்த நாணய வெளியிட்டு விழாவில் இணை அமைச்சர் பெயர் முருகன் இடம்பெறவில்லை, ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் இந்த நாணய வெளியீட்டு விழா மாநில விழா அல்ல, மத்திய அரசு விழா தான் என்று முழு பூசணிக்காயை முதல்வர் ஸ்டாலின் மறைக்க பார்க்கிறார். இதை கேள்வி கேட்ட அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியை அரசியல் நாகரீகம் இல்லாமல், தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிமற்ற முறையில் தனி நபர் தாக்குதலை செய்து, மூளை உள்ளதா என்று கிண்டலும், நையாண்டிமாக பேசியுள்ளார். இந்த விழா மத்திய அரசு விழா அல்ல என்று இணை அமைச்சர் முருகனும் கூறியுள்ளார்" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE