இதற்குமேல் அவகாசம் வழங்க முடியாது - செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறையை எச்சரித்த உச்ச நீதிமன்றம்

By KU BUREAU

புதுடெல்லி: செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில், ‘இன்று இறுதி நாள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது’ என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வழக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் ஆஜராகவில்லை. பின்னர் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, நீதிபதி எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 20-ம் தேதி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஆஜராக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரி அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இன்று இறுதி நாள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி ஓகா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE