நாகர்கோவில்: மருந்துவாழ் மலை உச்சியில் பரிதவித்த கேரள இளைஞர் மீட்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: மருந்துவாழ்மலை உச்சியில் 500 அடி உயரத்தில் பரிதவித்த கேரள வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் இன்று கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ் மலை உச்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மலையேறி சென்றுள்ளார். மலையில் 500 அடி உயரத்தில் சென்ற சிவகுமார் மேலே செல்லவும், கீழே இறங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக மருந்துவாழ்மலை அடிவாரத்திற்கு சென்ற பக்தர்கள் அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளனர்.

தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மருந்துவாழ் மலைக்கு சென்றனர். வீரர்கள் கயிறு போன்ற உபகரணங்களுடன் சென்று சிவகுமாரை பத்திரமாக மலை உச்சியில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE