நாளை ராஜீவ் காந்தி 80-வது பிறந்தநாள்: காங்கிரஸார் வாகன ஊர்வலம் - செல்வப்பெருந்தகை தகவல்

By KU BUREAU

சென்னை: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்வேன் என்று உறுதிபூண்டவர் ராஜீவ் காந்தி.

40-வது வயதில் நாட்டின் மிக இளவயது பிரதமராக பொறுப்பேற்று உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். அறிவியல், தொழில்நுட்பம்தான் நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். அறிவியல் துறையில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாடு எதிர்நோக்கி இருந்த பல பிரச்சினைகளை தீர்க்க, திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.

அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதை தடுத்து, மக்களவை, சட்டப்பேரவைக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா போன்ற அமைப்புகளை உருவாக்கி ஜனநாயகத்தை பரவலாக்கியவர். சிறந்த, வல்லமைமிக்க பிரதமராக சுடர்விட்டார்.

இந்தியாவும், இந்தியர்களும் உலகில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார். அதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். நாட்டின் பிரதமராக 5 ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் உலகம் போற்றும் வகையில் சாதனைகள் படைத்து இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.

தமிழக மக்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம், அன்பு அளவற்றவை. 1988-ம் ஆண்டில் 13 முறை தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிராமம் கிராமமாக அவரே வாகனத்தை ஓட்டிச் சென்று வழிநெடுக மக்களை சந்தித்தார். அவர்களோடு உரையாடி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து ஏழை, எளிய மக்கள் மீது அன்பை பொழிந்தார்.

ராஜீவ் காந்தி 80-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 20-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் அவரது உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்று, அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பற்றிய துண்டு பிரசுரத்தை வழிநெடுக விநியோகித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE