ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக உயர்வு: மேட்டூர் அணையிலிருந்து 26,000 கனஅடி நீர் திறப்பு

By KU BUREAU

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர்வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதல் 21,500கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர்திறப்பு நேற்று மாலை முதல் 26,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையின் 16 மண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்துக்கு 21,500கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், சேலம் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 14-ம் தேதி காலை விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE