காவிரி ஆற்றில் 26,000 கன அடி நீர் திறப்பு: மேட்டூர் அணை 16 கண் மதகு மீண்டும் திறப்பு 

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக இன்று (17-ம் தேதி) மாலை 6 மணி முதல் விநாடிக்கு 4,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 26,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 30-ம் தேதி எட்டியது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வரும் உபரி நீர் அணையின் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், நீர் வரத்து குறைந்த நிலையில், டெல்டா நீர் திறப்பால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடிக்கும் கீழே குறைந்தது.

இதன் பின்னர், அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணை 2-வது முறையாக, கடந்த 12-ம் தேதி முழு கொள்ளவை எட்டியதும், மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, 16 கண் மதகுகள் வழியாக 12-ம் தேதி இரவு முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தால், கடந்த 14-ம் தேதி இரவு உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

கரையோர மக்களுக்கு வருவாய் துறையினரின் வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு நேற்று விநாடிக்கு நீர்வரத்து 16,500 கன அடியாக இருந்த நிலையில், இன்று 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16,000 கன அடி வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் 21,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி உபரிநீர் இன்று மாலை முதல் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், சேலம் மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE