பாரிமுனை பழைய சட்டக்கல்லூரி அருகே 5 மாடி நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஐகோர்ட் அனுமதி

By KU BUREAU

சென்னை: பாரிமுனை பழைய சட்டக்கல்லூரி அருகே 5 மாடிகளுடன் புதிதாக நீதிமன்ற கட்டிடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டு விழாவை நடத்தஉயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதிவழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற அறைகள், நீதிபதிகளின் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 மாடிகள் கொண்ட புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் பசுமை வழிச்சாலையில் நீதிபதிகளுக்கான 10 கட்டிடங்கள் கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா இன்று (மே 22) நடைபெறவுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் 5 மாடிகளுடன் புதிதாக நீதிமன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோரை கொண்ட விடுமுறை கால சிறப்பு அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றம் புராதன சிறப்புமிக்க கட்டிடமாக இருப்பதால் மாஸ்டர் ப்ளான் எதுவுமில்லாமல் புதிதாக எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்க உத்தரவிட வேண்டும். மாஸ்டர் ப்ளான் வகுக்கும் வரை, புதிதாக 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘பாரம்பரியமிக்க பழைய சட்டக் கல்லூரியை இடிக்கப் போவதில்லை. அதன் அருகில் தான் 5 மாடி கட்டிடம் அமையப் போகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டுமானங்கள் மேற்கொள்ள தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், அடிக்கல் நாட்டுவதற்கு எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை. அதேநேரம் உரிய அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட கட்ட முடியாது. மேலும், 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மோகன் அளித்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற கட்டிடக் குழு நேற்று மாலை ஆய்வு செய்தது.

அந்த கூட்டத்தில், இதுதொடர்பாக புதிய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய குழுவின் அறிக்கை அடிப்படையில் முடிவெடுத்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். அதற்கு முன்பாக எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்காது என உறுதி தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகப் பிரிவு பதிவாளர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மத்திய, மாநில அரசுகள் தவிர, வேறு யாரும் கட்டுமானங்களை மேற்கொள்வதாக இருந்தால்தான் முன்அனுமதி தேவை என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற கட்டிடக் குழுவின் கூட்ட முடிவுகளை பதிவு செய்துகொண்டு, இன்று (மே 22) நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவை நடத்தலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே சட்டக்கல்லூரி வளாகத்தில் இருந்த இரு சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவை இந்து மத முறைப்படி மட்டுமல்லாமல், அனைத்து மத முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதாக திராவிடர் கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முரளிசேகர் ஆஜராகி முறையீடு செய்தார்.

அதற்கு நீதிபதிகள், இந்த நிகழ்வு ஒரு மத நிகழ்வு என எப்படி அனுமானிக்க முடியும் எனக்கேள்வி எழுப்பி அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE