திருவண்ணாமலையில் உயிரிழந்த எஜமானியின் உடலுடன் சுடுகாடுவரை சென்று பாசப்போராட்டம் நடத்திய நாயின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி (85). பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சுதந்திரத்திற்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் குடியேறினார். பின்னர் மும்பையில் ஆசிரியையாக பணியாற்றினார்.
அதைத்தொடர்ந்து, சென்னையில் சில ஆண்டுகள் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகாததால் குடும்பத்தார் இல்லாமல் தனித்தே வசித்து வந்தார். இந்நிலையில், இவரது உறவினர்கள் சிலர் திருவண்ணாமலையில் வசித்து வந்தனர்.
வயது மூப்பின் காரணமாக அல்லல்பட்டு வந்த, மூதாட்டி குறித்து அறிந்த அவர்கள், தங்களுடனேயே திருவண்ணாமலை அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கும் கடந்த 2 ஆண்டுகளாக மூதாட்டி தனித்தே வாழ்ந்ததாக தெரிகிறது.
மூதாட்டி தாராகவுரி திருவண்ணாமலையில் வசித்த காலத்தில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாயே இவருடன் முழுநேரமும் ஆறுதலாக இருந்துள்ளது. அதற்கு நோபு என பெயரிட்ட அந்த மூதாட்டி தினமும் உணவு கொடுத்து பராமரித்து வந்தார்.
தனது எஜமானி இறந்ததை அறியாமல் அந்த நாய் சுற்றிச் சுற்றி வந்து மூதாட்டியின் உடல் மீது படுத்துக்கொண்டு அவரை எழுப்ப முயன்றது. இதுகுறித்து அறிந்த தாராகவுரியின் உறவினர்கள், அங்கு சென்று, சமூக சேவகர் மணிமாறன் என்பவர் உதவியுடன் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
அப்போது, மூதாட்டி பிரியத்துடன் வளர்த்த நாய் உடலை எடுக்க விடவில்லை. பின்னர் வாகனத்தில் உடலை ஏற்றியபோது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது.
அப்போதும் அந்த பெண்ணின் உடல் அருகே நின்று வாலை ஆட்டிக் கொண்டே தவித்தது. மேலும் சுடுகாடு வரை உடன் வந்த வளர்ப்பு நாய் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே பரிதவிப்புடன் இருந்தது. இதையடுத்து மூதாட்டியின் உடல் கிரிவலப் பாதையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாசத்துடன் வளர்த்த எஜமானியை பிரிய முடியாமல் அந்த நாய் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தது, காண்போரை கண் கலங்க வைத்தது. மூதாட்டியின் உறவினர்கள் நாயை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை தைப்பூசம்... இப்படி வணங்கினால் வாழ்வின் சிக்கல்கள் தீரும்!
பட்ஜெட் 2024: வீட்டுக்கடனில் அதிரடி மாற்றம்... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாற்றங்கள்?!
ஏளனமா பேசுனவங்க முன்னாடி வாழ்ந்து காட்டிட்டோம்! காதல் ஜோடியின் தன்னம்பிக்கை கதை!