வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: பொன்னேரியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

By இரா.நாகராஜன்

பொன்னேரி: வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பொன்னேரியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினமான இன்று மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரவேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யவேண்டும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) சார்பில் நடைபெற்ற இந்த பேரணி, பொன்னேரி- திருஆயர்பாடி முதல், கிருஷ்ணாபுரம் வரை சுமார் 3 கி.மீ., தூரம் நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், 17 டிராக்டர்கள் அணி வகுத்து சென்றன. இதில், சங்கத்தின் மாநில நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE