பாட புத்தகங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிப்பு: பெற்றோர், மாணவர்கள், போட்டி தேர்வர்கள் அதிருப்தி

By KU BUREAU

சென்னை: பள்ளி பாடப் புத்தகங்களின் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பெற்றோர், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான பாடப்புத்தகங்கள் தமிழக பாடநூல் கழகம் சார்பில்அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பாடநூல்களின் விலை 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தளவு விலை உயர்வுக்கு தனியார் பள்ளிகள், பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும், பழைய புத்தகங்களை பள்ளி மாணவர்களிடம் பெற்று மறுசுழற்சி செய்யலாம். இல்லையெனில், குறைந்த விலையில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு வழங்கலாம் எனவும் இளைஞர்கள் தரப்பில்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறும்போது, ‘‘எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பள்ளி பாடப் புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் வசதியானவர்கள் இல்லை. எனவே, மாணவர்கள், பெற்றோர் நலனை கருத்தில் கொண்டு புத்தகங்கள் விலை உயர்வை பள்ளிக்கல்வித் துறை திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.

5 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்றம்: மறுபுறம் காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்கள் விலை ஏற்றப்பட்டுள்ளதாக பாடநூல் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பாடநூல் கழக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பாடப்புத்தகங்களின் விற்பனை விலையை பொருத்தவரை 5ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாக கொண்டு விலை மறுநிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடைசியாக தமிழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டபோது விலை திருத்தியமைக்கப்பட்டது.

தரம் உயர்ந்த எலிகண்ட் பிரிண்டிங் பேப்பர் 80 ஜிஎஸ்எம் தாள் மற்றும் 230 ஜிஎஸ்எம் ஆராபோல்டு புளுபோர்டு மேலட்டைகொண்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டதால் விலையானது உயர்த்தப்பட்டது. இந்தசூழலில் புத்தகங்களின் உற்பத்தி செலவீனம் தற்போது உயர்ந்துவிட்டது. அதாவது, 2018-2019-ம் ஆண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதைவிட தற்போது புத்தகங்களின் உற்பத்தி பொருட்களான காகிதத் தாள் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக ஒரு புத்தகத்துக்கான உற்பத்தி செலவீனம் விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.

இதையடுத்து நடப்பாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களின் விலையை பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.90 வரை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30–40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30- 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40–70 வரையும், 9- பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.50–90 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தவித லாப நோக்கமும் இல்லை. மேலும் அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாகவே புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE