கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பேராசிரியரைக் கண்டித்து மாணவர்கள் 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்து, மாணவர்கள் 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, முதல்வர் அறையின் முன் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் முதுநிலை தமிழ்த் துறை பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ. இவர் முதுநிலை தமிழ்த் துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தியபோது, சாதிய ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் அண்மையில் கடிதம் வழங்கினர்.

ஆனால், பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால், அந்தத் துறை மாணவர்களான பாலு மற்றும் பிரகாசம் ஆகியோர் தலைமையில், மாணவ - மாணவியர் (இந்தக் கல்லூரி வளாகத்தில் பெண்கள் கல்லூரியும் உள்ளது) 3-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முதல்வர் அறை முன்பாக தரையில் அமர்ந்து, தமிழ்த்துறை பேராசிரியரைப் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என முழக்கமிட்டு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மாணவர்கள்,"கல்லூரி நிர்வாகம், தமிழ்த் துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம்" என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE