வாழ்வாதாரத்தை மீட்டுத்தரக் கோரி பழநியில் வியாபாரிகள் பால்குடம் எடுத்து வேண்டுதல்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள், வியாபாரிகள் இன்று முருகனுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயில் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதா கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் நுழைவதையும், வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்கவும் வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, கிரிவலப் பாதையில் இருந்த 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மேலும், கிரிவல பாதையில் வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதேபோல், தனியார் வாகனங்கள் நுழைய தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

மேலும், நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை கோயில் நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, மக்களின் பொதுவழிப்பாதை உரிமைகளை பாதுகாக்கவும், நகராட்சியின் உரிமைகளை முடக்கும் கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் ஜூலை 13-ம் தேதி ஒரு நாள் பழநி நகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, 'என் மண் என் உரிமை' எனும் பெயரில் பழநிவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தரக் கோரி, இன்று (செவ்வாய்கிழமை) காலை அடிவாரம் பகுதி மக்கள், வியாபாரிகள் என திரளானோர் திருஆவினன்குடியில் இருந்து பழநி மலைக்கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்று முருகனை மனமுருகி வேண்டி வழிபாடு நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE