பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் தொங்கும் கேபிள்களை அகற்றும் பணி தீவிரம்

By KU BUREAU

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்கள் தங்கள் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் (OFC) மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்களை சுமார் 5 ஆயிரம் கிமீ நீளத்துக்கு மேல் நிறுவியுள்ளன. அவற்றிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்லும் கேபிள்கள் அனைத்தும், மாநகராட்சியின் சாலையோர தெரு மின்விளக்கு கம்பங்களை நம்பியே உள்ளன.

ஒருசில பெரு நிறுவனங்கள் சொந்தமாக கம்பங்களை அமைத்துக்கொள்கின்றன. இந்நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வாடகை மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி வருவாய் கிடைக்கிறது. பல நிறுவனங்கள் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று கேபிள்களை நிறுவுகின்றன.

சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கும் கேபிள்களை நிறுவியதும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனங்கள் சில விதிகளை முறையாக பின்பற்றி, கேபிள்களை நிறுவுவதில்லை. ஆபத்தான முறையில், பாதசாரிகளின் கழுத்தை பதம் பார்க்கும் வகையில் சாலைகளில் கேபிள்கள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன.

குறிப்பாக சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை,வால்டாக்ஸ் சாலை, மின்ட் சாலை, எல்லிஸ் சாலை, பாந்தியன் சாலைஉள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான சாலைகளில் மாநகராட்சி மின் விளக்கு கம்பங்களின் மூலமாக ஆங்காங்கே சாலைகளின் குறுக்கே கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

மாநகரப் பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் கேபிள்களை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தொங்கும் கேபிள்கள் அகற்றப்படுகின்றன. மாநகராட்சிக்கு புகார்வந்தால், எந்த கிழமையாக இருந்தாலும் உடனுக்குடன் அகற்றப்படுகிறது.

தற்போது கேபிள்களுக்கென சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, அப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கேபிள்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேபிள்களை அகற்ற கூடுதல் பணியாளர்கள், வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE