சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு: தேனி போலீஸார் நடவடிக்கை

By KU BUREAU

தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதுமீண்டும் குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் இந்த வழக்கைப் பதிவுசெய்தனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர், தேனிபூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதிதங்கியிருந்தார். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கோவை போலீஸார் அப்போது அவரை கைது செய்தனர். அவரது கார் மற்றும் விடுதி அறையைச் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்ததாகக் கூறி அவரை பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 2 பேரையும் இந்த வழக்கில் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் நேற்று மாலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களைப் போராடத்தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தால் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE