அவமரியாதையாக நடத்தும் அரசு ஊழியர்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவமரியாதையாக நடத்தும் ஊழியரைக் கண்டித்து திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் நந்தினி என்பவர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மாற்றுத்திறனாளிகளை ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசி தொடர்ச்சியாக அவமரியாதையாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை மோசமாக நடத்தும் அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.

அத்துடன், நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE