‘அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்’ - சென்னையில் ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்த ஆளுநர்

By KU BUREAU

சென்னை: ‘அறியப்படாத சுதந்திர போராட்டவீரர்கள்’ என்ற தலைப்பில் பள்ளிமாணவர்கள் வரைந்துள்ள ஓவியங்கள், சென்னை வியாசர்பாடி விவேகானந்தா பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் ஓவியங்கள்: நாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஜெய்சுயா அறிவுசார் கல்வியகம், தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில் ‘அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது.

இதில், 10 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்று சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

மாணவர்களால் வரையப்பட்ட 78 சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்கள் சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்து, ஓவியங்களை பார்வையிட்டார்.

3 வயது முதல் பயிற்சி: இதுகுறித்து ஜெய்சுயா அறிவுசார் கல்வியகத்தின் நிறுவனர் ஜே.வைத்தியநாதன் கூறியபோது, ‘‘இந்த கல்வியகத்தை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இதில் 3 வயது முதல் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். மாணவர்களின் ஓவிய கண்காட்சி இப்பள்ளியில் ஆகஸ்ட் 13-ம் தேதி (நாளை) வரை நடைபெறும்’’ என்றார்

இந்த நிகழ்ச்சியில் ஜெய்சுயா அறிவுசார் கல்வியக முதல்வர் வி.உதயமதி, பள்ளி தாளாளர் எஸ்.ராமச்சந்திரன், பள்ளியின் முதல்வர் எம்.லதா, தென்னிந்திய ஆய்வு மையத்தின் சென்னை பொறுப்பாளர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE